Friday, November 23, 2012

கார்த்திகை தீபம் திரு விளக்கின் சிறப்பு

திரு விளக்கின் சிறப்பு – கார்த்திகை தீபம் ஏற்றி!… வறுமை இருளுக்கு ஒளியேற்றுவோம்!..

karthigai-deepam-2013


கார்த்திகை தீபத்தின் நோக்கம், பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்திற்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், அந்த ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூ
ட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துகளின் உடலில் கூட அந்த பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. தீபத்தின் ஆடி பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், எண்ணெய் நிறையும் இடத்தில சிவபெருமான் வாசம் செய்கிறார்.

கார்த்திகை விளக்கின் தத்துவம்

எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.

முதல் விளக்கு திருவிழா

திருவிளக்கு திருவிழா இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிப்பாட்டை “கார்த்திகை விளக்கீடு”என்று குறிப்பிடுகின்றன .பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு , நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கிராமங்களில், திருவிளக்கை “தாய்” என்றும் “நாச்சியார்” என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப்பாடி பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தூப தீபம் காட்டினால் நிலையான பலன் கிடைக்கும்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்

திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை தான் அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அறியும் நாளே திருக்கார்த்திகை.

சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின, ஆறு தீபப் பொறிகளும் சரவணப் பொய்கையில் மூழ்கி சிறு குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ் சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் சின்ன சின்ன குழந்தைகளாக, முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும் போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல் தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.

திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும்

திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தன பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, கஜ லட்சுமி, வீர லட்சுமி , விஜய லட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுக்கள் வைப்பதற்கு தத்துவரீதியாக காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக! 


நன்றி ! 
Vysyamala...

4 comments:

  1. அருமையான விளக்கங்களுடன் கார்த்திகை தீபத்தின் பெருமையை சொல்கிறது உங்க பதிவு..இப்பதான் உங்க பிளாக் வந்தேன்.தொடருங்கள்..தொடர்ந்து வருகிறேன்.நன்றி..

    ReplyDelete
  2. மிக்க நன்றி... Thava Kumaran

    ReplyDelete
  3. அருமையாக கூறினிர்கள்

    ReplyDelete
  4. NICE MESSAGE
    THANK YOU FOR YOUR INFORMATION.

    ReplyDelete